சீதாராம் யெச்சூரி pt web
இந்தியா

மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார் - மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட உடல்!

PT WEB

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் காலமானார்.

நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமாக இருந்து வந்தது. டெல்லியில் உள்ள All India Institute Of Medical Sciences மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

சீதாராம் யெச்சூரி

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் சீதாராம் யெச்சூரி உயிரிழந்துவிட்டார் என்ற சோக செய்தி வந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி. மாநிலங்களவை உறுப்பினராகவும், கட்சியின் தலைவராகவும் இருந்தவர். தற்போது அவர் உயிரிழந்துள்ள செய்தி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுமையுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செய்தியாக உள்ளது.

SitaramYechury

முன்னதாக, தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்த சீதாராம் யெச்சூரியின் உடல்நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. பின் மீண்டும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, அதிலிருந்து மீளாமலேயே தற்போது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சீதாராம் யெச்சூரியின் உடல் தானமாக வழங்கப்பட்டுள்ளது. சரியாக 3 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன.

அதேவேளையில், அவரது உடலை அவரது குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ படிப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அனுமதியை அவரது குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.