இந்தியா

ராமருடன் சீதைக்கும் சிலை: காங்கிரஸ் கோரிக்கை!

webteam

அயோத்தியில் அமைக்கப்பட இருக்கும் ராமர் சிலையுடன் சீதையின் சிலையையும் நிர்மாணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கரண் சிங் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இந் நிலையில், அங்கு ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரண்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில், ராமருக்கு மிகப்பெரிய சிலை வைக்க முடிவெடுப்பதாக அறிந்தேன். அப்படி இருந்தால் ராமர் சிலையின் உயரத்தை பாதியாக குறைத்து அவருடன் சீதையின் சிலையையும் சேர்த்து நிர்மாணிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

’’மிதிலையில் நடந்த திருமணத்துக்குப் பிறகு சீதை அயோத்திக்கு வந்தார். வந்த சில காலங்களிலேயே ராமருடன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றுவிட்டார். அங்கு ராவணனால் கடத்தப்பட்டார். ராமரால் மீட்கப்பட்டு மீண்டும் அயோத்திக்கு வந்தார். அக்னி பிரவேசம் செய்தார். அதனால் அயோத்தியில் ராமர் சிலைக்கு அருகில் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும். இது சீதைக்கு பெருமை சேர்க்கும்’’ என்று மேலும் தெரிவித்துள்ளார்.