இந்தியா

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூரின் உறவினர்கள்

webteam

காங்கிரஸ் எம்.பி சசிதரூரின் அத்தை மற்றும் மாமா உள்ளிட்ட உறவினர்கள் பாஜகவில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சியில் பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் எம்.பி சசிதரூரின் அத்தை சோபனா, அவரது கணவர் சசிகுமார், உள்ளிட்ட 14 உறவினர்கள் மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். 

இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சசிதரூர் குடும்பத்தினர் எனவும் இவர்கள் தொடக்கத்தில் இருந்தே பாஜக பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து சசிதரூரின் உறவினர்கள் கூறுகையில், “நாங்கள் அனைவரும் சசிதரூரின் நெருங்கிய உறவினர்கள். அனைவரும் நீண்டகாலமாக பாஜகவின் ஆதரவாளர்களாக இருந்தோம். ஆனால், பாஜகவில் இணைவதற்காக இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏன் ஏற்பாடு செய்தார்கள் எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்தனர்.

எர்ணாகுளம் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் கே.எஸ். ஷைஜூ கூறுகையில், “சசிதரூரின் உறவினர்கள் பாஜக உறுப்பினர் அட்டை பெற்று, முறைப்படி பாஜகவில் இணைய வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். அதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.