ஹர்ஷா சாய் முகநூல்
இந்தியா

யூட்யூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!

PT WEB

இன்ஸ்டாகிராமிலும், யூட்யூபிலும் காலம் கழிப்பவர்களுக்கு ஹர்ஷா சாயை நன்றாகத் தெரியும். போகும் இடமெல்லாம் பெரிய கூட்டமே கூடிவிடும். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 14.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபர்களுக்கு பண உதவி, பொருள் உதவிகள் அளித்து அவர்களை ஆச்சரியப்படுத்துவதற்கு பிரசித்தி பெற்றவர் ஹர்ஷா சாய். பணத்தை அள்ளிவிடுவதன் காரணமாகவே இவர் Mr Beast of India என்று அறியப்படுகிறார்.

ஹர்ஷா சாய்

இவர் மீது கடந்த 24 ஆம் தேதி (நேற்று முன்தினம்) ஹைதராபாத்தின் நர்சிங்கி காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த 25 வயது நடிகை, ஹர்ஷா சாயுடன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றிருந்தார். மேலும் கடந்த ஆண்டு இருவரும் சேர்ந்து நடித்த படம் வெளியாகி இருந்தது.

முதலில் பொது நண்பர்கள் மூலம் அறிமுகமான இருவருக்கும் இடையேயான உறவு வலுப்பட்டதாகவும், நடிகையை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஹர்ஷா சாய் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அப்பெண் புகார் அளித்துள்ளார். தனது அந்தரங்கப் புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு ஹர்ஷா மிரட்டுவதாக நடிகை அளித்த புகாரில் ஹர்ஷா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது வரை ஹர்ஷா சாய் கைது செய்யப்படவில்லை. பெண் அளித்த புகாரில் ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஹர்ஷா சாய், தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இவை அனைத்தும் பணம் பறிக்கும் பொய்யான குற்றச்சாட்டுகள். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும், உண்மை விரைவில் வரும். என் வழக்கறிஞர் இனி இதை பார்த்துக்கொள்வர்” என்று Thumbsup காட்டி பதிவிட்டுள்ளார்.