இந்தியா

20 பெண்களை கொன்ற ’சயனைடு’ மோகன், 16-வது வழக்கிலும் குற்றவாளி!

20 பெண்களை கொன்ற ’சயனைடு’ மோகன், 16-வது வழக்கிலும் குற்றவாளி!

webteam

இருபது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சீரியல் கில்லர், ’சயனைடு’ மோகன் 16 வது வழக்கிலும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். ஆசிரியரான இவர், கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டுக்குள் 20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்றுள்ளார். தான் வனத்துறையில் பணியாற்றுவதாகவும் தனது பெயர் சுதாகர் ஆச்சாரியா என்றும் கூறி பெண்களை மயக்கியுள்ளார். அவர்களோடு பாலியல் உறவு வைத்துக்கொண்ட பின் கருத்தடை மாத்திரை என்று சொல்லி சயனைடை கொடுத்து கொன்றுள்ளார். 

சுள்ளியா பகுதியைச் சேர்ந்த சுனந்தா, வம்படபதவு பகுதியைச் சேர்ந்த லீலாவதி, பாரிமார் பகுதியைச் சேர்ந்த அனிதா, மங்களுரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் உட்பட 15 பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. 

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த இசை ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு பெங்களூரில் நடந்து வந்தது. இந்த வழக்கிலும் அவர் குற்றவாளி என்று சனிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனை விவரம் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இது அவர் மீதான 16 வது வழக்கு. இன்னும் சில வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.