இந்தியா

சாகித்ய அகாடமி விருது பெற்ற பழம்பெரும் அரசியல்வாதி வீரேந்திரகுமார் மறைவு

jagadeesh

சாகித்ய அகாடமி விருது வென்ற கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திர குமார் (84) இன்று காலமானார்.

கேரள மாநிலம் வயநாடு கல்பேட்டாவை சேர்ந்தவர் வீரேந்திரகுமார். மூத்த அரசியல்வாதியான இவர் உடல் நலக்குறைவால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 84. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோசலிஸ்டு கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்ட வீரேந்திர குமார், பின்னர் சரத் யாதவ் தொடங்கிய லோக் தந்திரிக் ஜனதா தள் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார்.

வீரேந்திர குமார் 1987-ல் கேரள சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1996 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார் வீரேந்திர குமார். அரசியல் பணியுடன் இவர் எழுத்து துறையிலும் சிறந்து விளங்கினார்.

வீரேந்திர குமார் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக மூன்று முறை பணியாற்றினார். மேலும் செய்திக் குழுவில் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வந்தார். வீரந்திர குமார் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி உள்படப் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.