sengol pt
இந்தியா

செங்கோலுக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு; ’தமிழர் கலாசாரத்தை அழிக்க நினைக்கிறார்கள்’ என கொந்தளித்த பாஜக

யுவபுருஷ்

தமிழர் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்க நினைக்கிறார்கள் என அதற்கு எதிராக பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர்... வழக்கமாக தமிழர் கலாசாரத்தை, பண்பாட்டை பாஜக அழிக்கிறது என மற்ற கட்சிகள் கொந்தளித்ததுபோக, இந்த விவகாரத்தில் அதற்கு நேரெதிராக நடந்துகொண்டிருக்கிறது.., என்ன நடக்கிறது, விரிவாகப் பார்ப்போம்.

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்து அப்போதைய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டனால் பெறப்பட்ட `செங்கோல்', இந்தியாவின் முதல் பிரதமரான நேருவிடம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அது ஒரு மரபாக மாறிவிட்டது...கடந்த ஆண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, திறப்பு விழா அன்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோல் கொடுக்கப்பட்டு அது மக்களவையில் வைக்கப்பட்டது.

இந்தநிலையில், 18-வது மக்களைவையின் சமாஜ்வாடி எம்.பியான ஆர்.கே.சௌத்ரி, தற்காலிக சபாநாயகரான பர்த்ருஹரி மஹ்தாப்புக்கு செங்கோல் குறித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார்...அந்தக் கடிதத்தில், ``செங்கோல் என்பது ராஜ முத்திரை. இது ராஜாக்கள் வைத்திருக்கும் கோள். மன்னராட்சி முடிவுக்கு வந்து, நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனால், தற்போது நாட்டில் மன்னராட்சி நடைபெறுகிறதா? அல்லது அரசமைப்பின்படி ஆட்சி நடைபெறுகிறதா? எனவே, நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் செங்கோல் அகற்றப்பட்டு, அரசமைப்புப் புத்தகம் வைக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தது...

அவரின் கருத்தை ஆதரித்துப் பேசிய காங்கிரஸ் .எம்.பி, ``செங்கோல் என்பது மன்னராட்சியைக் குறிக்கிறது. அந்த சகாப்தம் முடிந்துவிட்டது என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். எனவே, மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நாம் கொண்டாட வேண்டும்" என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ராஷ்டிரிய ஜனதா தளமும் சமாஜ்வாதி எம்.பியின் கருத்தை வரவேற்றுள்ளது...ஆனால், எம்.பியின் கடிதத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ”இந்தியாவின் மற்றும் தமிழக கலாசாரத்தை சமாஜ்வாதி எம்.பி. அவமதித்துவிட்டார், செங்கோல் மன்னாட்சியின் அடையாளம் என்றால், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களிடமிருந்து நேரு, ஏன் அதனைப் பெற்றுக்கொண்டார்? மன்னராட்சியின் அடையாளத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தமா?...தமிழகத்தின் செங்கோலை இழிவுபடுத்துவதை திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொள்வார்களா?’’ என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஹ்சத் பூனாவாலா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ``"இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.

'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது’’ என தன்னுடைய எக்ஸ் தளத்தில் தமிழில் கருத்துப் பதிவிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய அமைச்சர் எல்.முருகனும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``செங்கோல் நிறுவப்பட்டபோது, ​​பிரதமர் அதற்குத் தலைவணங்கினார். ஆனால், இந்த முறை பதவிப்பிரமாணம் செய்யும்போது அதற்கு அவர் தலைவணங்க மறந்துவிட்டார். அதனால், எங்கள் எம்.பி பிரதமருக்கு அதை நினைவூட்ட விரும்பினார் என்று நினைக்கிறேன்" என்று இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால், செங்கோலை அகற்றவேண்டும் என்கிற எம்.பி ஆர்.கே சௌத்ரியின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.