சந்தானகோபாலன் pt web
இந்தியா

ஒடிசாவின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக தமிழர் நியமனம்! யார்இந்த சந்தானகோபாலன் IAS? பின்னணி என்ன?

PT WEB

ஒடிசா மாநிலத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தான கோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்கிழமை (23/07/2024) அன்று வெளியிட்டுள்ளது.

இதற்கு முன் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த நிகுஞ்சா பிஹாரி தால், ஒடிசாவின் புதிய முதலமைச்சர் மோஹன் மஜி அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து தலைமை தேர்தல் அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில்தான், 2001 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சந்தானகோபாலன் ஒடிசாவின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா அரசாங்கத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதன் பின், சந்தான கோபாலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சந்தானகோபாலன் முன்னதாக தொழிலாளர் மற்றும் இஎஸ்ஐ துறை செயலாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தானகோபாலன் உடனடியாக பொறுப்பேற்பதை உறுதி செய்யுமாறு, ஒடிசாவின் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

யார் இந்த சந்தானகோபாலன்?

- கரூரைச் சேர்ந்தவர், கோவைத் தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

- 2001-ல் இந்திய ஆட்சிப் பணியைத் தொடங்கி ஒடிசா மாநிலத்தில் பலாங்கீர் காலகந்தி ஆகிய இரு மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகப் பணியாற்றியவர்.

- 2010- முதல் ஒடிசா மாநிலத்தில் வேளாண்மைத்துறை அமைச்சகத்தில் இயக்குநராகவும், பின் நீர்வளத்துறையின் சிறப்புச் செயலாளராகவும் பெரும்பங்காற்றியவர்.

- ஒன்றிய அரசின் அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒத்துழைப்போடு 800 வகை அரிசி வகைகளை வகைப்படுத்தி அம்மாநிலத்துக்குப் பெருமை சேர்த்தவர்.

- 2017 முதல் ஆதார் அட்டை வழங்கி நிர்வகிக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் துணைப் பொது இயக்குநர்.

- தமிழ் இலக்கியம், இந்திய வரலாறு, உலகப் பண்பாட்டு வரலாறு ஆகிய துறையில் தீவிர அராய்ச்சியாளர்.