சச்சின் ட்விட்டர்
இந்தியா

’உங்க வீட்டு கலவை மெஷின் சத்தம் தொந்தரவா இருக்கு’ - சச்சினுக்கு எதிரா புகார் சொன்ன நபர்! வைரல்பதிவு!

Prakash J

இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய ஆட்டத்தைப் பார்த்து கிரிக்கெட்டுக்குள் நுழைந்தவர்கள் பலர். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். எனினும், இன்றும் அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், சச்சின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபர் பதிவிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில் உள்ள சச்சின் வீட்டில் கட்டடப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கலவை இயந்திரம் கொண்டுவரப்பட்டு பணிகள் இரவுபகலாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவிலும் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், அது அருகில் இருக்கும் அந்த நபருக்குப் பிடிக்கவில்லை. அதாவது, அந்த இயந்திரத்தின் சத்தம் தொந்தரவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு சச்சினுக்கு அறிவுறுத்தும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “அன்புள்ள @sachin_rt, இரவு 9 மணி ஆகிவிட்டது, உங்கள் பாந்த்ரா வீட்டிற்கு வெளியே நாள்முழுவதும் பலத்த சத்தம் எழுப்பும் சிமெண்ட் கலவை இயந்திரம் தற்போதும் இயங்கிவருகிறது. அது, சத்தமாக ஒலிக்கிறது. தயவுசெய்து உங்கள் வீட்டில் வேலை செய்பவர்களை நியாயமான நேரத்தை கடைப்பிடிக்கும்படி கேட்க முடியுமா? மிக்க நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. தவிர, 500க்கும் மேற்பட்ட மறுபதிவுகளையும் பெற்றுள்ளது. தொடர்ந்து, இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: csk vs pbks| டக் அவுட் ஆன தோனி.. உற்சாகத்தில் கை தட்டிய ப்ரீத்தி ஜிந்தா.. #ViralVideo