இந்தியா

சபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் ? எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு

webteam

கேரளா அரசு சபரிமலையில் எத்தனைப் பெண்கள் தரிசனம் செய்தார்கள் என்ற எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யவுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் மன உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி போராட்டங்கள் நடந்தன. 

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரு பெண்கள் சபரிமலையில் முதல்முறையாக தரிசனம் செய்தனர். இவர்கள் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் பாதுகாப்பு கருதி போலீசார், இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது சபரிமலை சென்றது தொடர்பாக கனகதுர்காவுக்கும், அவர் மாமியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கனகதுர்காவை அவரது மாமியார் சுமதியம்மா சரமாரியாக தாக்கியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கனகதுர்காவும் பிந்துவும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் 24 மணி நேர பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலையில் 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட 51 பெண்கள் இதுவரை சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேளர அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களைப் பெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்த மாநில தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் “அவரின் துறைக்கும் இந்த அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார். அதேபோல, கேரளா அரசின் தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் “51 பெண்கள் அல்ல நிறையே பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர் ” என்றார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கேரளா பாஜக தலைவர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை “ இந்த தவறான தகவல்களிலிருந்தே கேரளா அரசு சரியாக செயல்படவில்லை என தெரிகிறது ”என்றார்.

இதற்கிடையே கேரளா அரசு தாக்கல் செய்த அறிக்கை இணையதல தரிசன பதிவிலிருந்து எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமர்சனத்தால் கேரள டிஜிபி லோக்நாத் இந்த அறிக்கையை சரிபார்க்க மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.