இந்தியா

‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ : பக்தி பாடகர் வீரமணி ராஜுக்கு சபரிமலை 'ஹரிவராசனம்' விருது

kaleelrahman

சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக் காலங்களில் இசைக்கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக கேரள அரசு ஆண்டுதோறும் சபரிமலை 'ஹரிவராசனம் விருது' வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டிற்கான சபரிமலை 'ஹரிவராசனம் விருது'க்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுபெற்ற பக்தி பாடகர் எம்.ஆர்.வீரமணி ராஜுக்கு வழங்கப்பட்டது

மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசன தினமான இன்று சபரிமலை சன்னிதானத்தில் நடந்த விழாவில் அவருக்கு சபரிமலை 'ஹரிவராசனம்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கேரள தேவஸ்வம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வீரமணி ராஜுவுக்கு விருதும், விருதுடன் சேர்த்து ஒரு லட்சம் ரூயாய் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேவஸ்வம்போர்டு தலைவர் என்.வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பக்தி பாடல்கள் பாடியுள்ள இவரது பாடல்களில், 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு', 'மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்', 'எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது' உள்ளிட்ட ஏராளமான ஐயப்பன் பக்தி பாடல்கள் பிரபலமானவை. விருதுபெற்ற பக்தி பாடகர் வீரமணி ராஜு, மேடையிலேயே அவர் பாடிய பிரபலமான 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' பாடலை பாடி பக்தி பரவசமூட்டினார்.

சபரிமலை 'ஹரிவராசனம் விருது' கடந்த 2012ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் பின்னணி பாடகர் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் எம்.ஜி.ஸ்ரீகுமார் ஆகியோரும், பின்னணி பாடகிகள் பி.சுசீலா, சித்ரா, ஜெயவிஜயா, இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர். 2020ம் ஆண்டிற்கான ஹரிவராசனம் விருது இசைஞானி இளையராஜாவிற்கு வழங்கப்பட்டது.