இந்தியா

சபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..

சபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..

webteam

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாத வழிபாட்டுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் வரத் தொடங்கியுள்ளனர். நேற்று கோயிலுக்குச் சென்ற பெண்கள் வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இன்றும் அவர்களை தடுக்கும் வகையில் சபரிமலைக்குச் செல்லும் வழிகளான எருமேலி, பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சமாஜம் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரண முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவிக்கின்றனர். நிலக்கல்லில் சபரிமலைக்கு வரும் பெண்களின் கால்களில் விழுந்து கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைப்பது மற்றும் கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புடன் பெண்களை அழைத்துசெல்ல காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க சபரிமலை செல்லும் வழிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சபரிமலையில் கோயிலின் அடிவாரப்பகுதியான நிலக்கல்லில் பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் காவலர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தொடர் தடியடியில் ஈடுபட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். தடியடியால் பலர் வனப்பகுதிக்குள் ஓடினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள அமைச்சர் சைலஜா, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தின் மூலம் சிலர் அரசியல் செய்வதாகவும் அவர் கூறினார்.