இந்தியா

சபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்களை ஏற்குமா உச்சநீதிமன்றம் ?

webteam

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி உச்சநீதிமன்றம் நாளை முடிவு செய்ய உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இதனயடுத்து பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் திரளாக திரண்டு பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இந்நிலையில் பெண்களை வெளியேற்றக்கோரி பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனைதொடர்ந்து சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது தொடர்பாக திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு பின் சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டது. மேலும் பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து  உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும். நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் ஷியாலஜா விஜயன், கேரள பிராமணர் சங்கத்தினர் என 20க்கும் மேற்பட்டோர் சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் தேவசம் போர்டும் சீராய்வு மனுவை விரைவில் தாக்கல் செய்ய போவதாக தகவல் தெரிவிதுள்ளது. இதற்கிடையே தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் ஷியாலஜா விஜயன் சீராய்வு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. 

20க்கும் மேற்பட்டோர் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா? என்ன செய்வது என்பது குறித்து நாளை முடிவை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்.