இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு

webteam

உச்சநீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவியேற்றார். புதிய தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‌பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர், பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

2013ஆம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பாப்டே, அயோத்தி வழக்கு, ஆதார் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த அமர்வில் இடம் பெற்றிருந்தார்.

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரித்த அமர்விற்கு பாப்டே தலைமை வகித்தார். அதில், ரஞ்சன் கோகாய் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ‌

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ பாப்டே‌. இவரது தந்தை அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே, பிரபலமான மூத்த வழக்கறிஞர் ஆவார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்து, 1978ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார் பாப்டே.

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இவர் பணியாற்றியுள்ளார். எஸ்.ஏ பாப்டே, வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.