இந்தியா

உணவு திட்டத்திற்கான ரூ.100 கோடியை தனியாருக்கு வழங்கிய வங்கி அதிகாரி

rajakannan

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதிய உணவு திட்டத்திற்கான ரூ.100 கோடி நிதியை அரசு கணக்கில் இருந்து கட்டிட தொழிலபதிபருக்கு ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் மாற்றி அளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஹடியா ஸ்டேட் வங்கியின் கிளையைச் சேர்ந்த முன்னாள் துணை மேலாளர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மதிய உணவு திட்ட நிதியை அரசு கணக்கில் இருந்து ரூ.100 கோடியை பானு கன்ஸ்ட்ரக்ஸன் என்ற தனியார் நிறுவனத்திற்கு மாற்றியுள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக நேற்று ராஞ்சி நகரில் உள்ள அந்தக் கட்டுமான நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் சிபிஐ போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். 

சிபிஐ போலீசார் இது தொடர்பாக கட்டிட தொழிலதிபரின் நிறுவனம் மற்றும் உரிமையாளர்கள் சஞ்சய் குமார் திவாரி, சுரேஷ் குமார், அஜய் ஆரவோன் ஆகியோர் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், புகாரில் சிக்கிய ஸ்டேட் வங்கியின் ஹடியா கிளை முன்னாள் அதிகாரி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கியின் தொழில் வளர்ச்சி பிரிவின் பொறுப்பு வகித்த அந்த அதிகாரி தற்போது சஸ்பெண்ட்டில் உள்ளார்.