மாதிரிப்படம் pt web
இந்தியா

கர்நாடகா | இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்கிய ரவுடி.. சுட்டுப்பிடித்த காவல்துறை

PT WEB

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜாகோபால் நகரைச் சேர்ந்தவர் பவன். வேலை.. குடும்பம்.. நண்பர்கள்.. என மகிழ்ச்சியாக கடக்க வேண்டிய வயதில், பல்வேறு குற்றங்களை புரிந்து காவல்துறைக்கு பயந்து ரவுடியாக வலம் வருகிறார் பவன். 28 வயதேயான பவன், குற்ற வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று, 4 நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது மீண்டும் புதிய குற்ற வழக்கில் சிக்கியுள்ளார்.

தான் சிறைக்கு செல்ல காரணமான விஸ்வாஸ் என்பவரை, ரவுடி பவன், கடந்த 15ஆம் தேதி கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். மேலும் தமது எதிரி கும்பலைச் சேர்ந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி ரவுடி பவன் தாக்கிய வீடியோ வெளியானது. இதனால், மீண்டும் ரவுடி பவனை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த முறை காவல்துறையிடம் அவர் சாதாரணமாக பிடிபடவில்லை. உல்லாலின் பிரம்மதேவர குட்டே பகுதியில் பவன் பதுங்கியிருந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை கைது செய்ய காவலர்கள் சென்றபோது, தலைமை ஏட்டை தாக்கிவிட்டு பவன் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, பவனின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த ரவுடி பவன், சுருண்டு விழுந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பவன் தாக்கியதில் காயமடைந்த தலைமை ஏட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.