இந்தியா

முகாமில் எத்தனை நாட்கள்? திக்கற்றுப்போன வடகிழக்கு டெல்லிவாசிகள்

webteam

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வீடுகளில் புகுந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தும் வீட்டை எரித்தும் சேதப்படுத்திய வன்முறையாளர்களால் வடகிழக்கு டெல்லி மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இவர்களுக்காக டெல்லி அரசு தரப்பில் எட்டு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி வக்பு வாரியம் தரப்பில் ஆயிரம் பேர் தங்கும் வகையில் முஸ்தஃபாபாத்தில் உள்ள எட்காஹ் பகுதியில் பிரமாண்ட முகாம் ஒன்றும் திறக்கப்பட்டது. அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், படுக்கை உள்ளிட்ட வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

முகாமில் அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டாலும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் வகையில் தங்களின் தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வீடு இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை பெறுவதற்கான ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் நிதியுதவியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

வன்முறையின்போது தீ வைத்துக் கொளுத்தப்பட்ட முக்கிய ஆவணங்களுக்கு மாற்றாக புதிய ஆவணங்கள் விரைவி‌ல் வழங்க‌ப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. எத்தனை நாட்கள் இந்த முகாமில் தங்கமுடியும், புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு அரசு கொடுக்கும் நிதி போதுமா என்பது போன்ற சந்தேகங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நிழலாடுகிறது