சுரேஷ் கோபி - மோடி புதிய தலைமுறை
இந்தியா

கேரளாவில் தடம் பதித்த பாஜக - வாக்கு சதவிகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்!

PT WEB

வரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் கால்பதித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. திருச்சூர் தொகுதியில் 37.8 சதவிகித வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் 35.52 சதவிகித வாக்குகளைப் பெற்று ராஜீவ் சந்திரசேகர் 2ஆவது இடத்தை பிடித்தார்.

பாஜக, சுரேஷ் கோபி

நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஆட்டிங்கல் தொகுதியில் மத்திய அமைச்சர் முரளிதரன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் 31.64 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இதுமட்டுமல்ல, கேரள மாநிலத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் 10க்கும் மேற்பட்டவைகளில் பாஜக கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

ஆலப்புழா மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வாக்குசதவிகிதம் 28.3 சதவிகிதமாகவும், பத்தனம்திட்டாவில் 25.29 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது. பாலக்காட்டில் 24.31ஆகவும், கோட்டயத்தில் 19.74 சதவிகிதமாகவும், காசர்கோட்டில் 19.73 சதவிகிதமாகவும், ஆலத்தூரில் 18.97 சதவிகிதமாகவும், கொல்லத்தில் 17.83 சதவிகிதமாகவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குசதவிகிதம் பதிவாகியிருக்கிறது.

கேரளாவில் பாஜகவுக்கு வாக்குசதவிகிதம் அதிகரித்திருப்பது இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்குசதவிகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.

இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ்

இருப்பினும் காங்கிரஸ் கூட்டணி அநேக இடங்களில் வெற்றிபெற்றதற்கு சிறுபான்மையினரின் ஆதரவு முக்கியம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. அதேநேரம், பாஜகவுக்கு வலுவான அடித்தளம் அமைய தொடங்கியிருக்கிறது என்பது தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. தீவிர பரப்புரை மற்றும் களப்பணியும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.