ரத்தன் டாடா முகநூல்
இந்தியா

RIP Ratan Tata | “தோற்பது அல்ல, முயற்சியே எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய தோல்வி” - ரத்தன் டாடா!

PT WEB

செய்தியாளர்: பரணி ரவிச்சந்திரன்.

இந்திய தொழில்துறையில் பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியவர் தொழிலதிபர் ரத்தன் டாடா... 3,800 கோடி ரூபாய்-க்கு அதிபதியாக இருந்தபோதும், பொதுமக்களின் அன்பைப் பெற்ற மனிதநேய பண்பாளராக இருந்தார். அவர் நம்மைவிட்டு நேற்றைய தினம் பிரிந்துள்ளார். தன் 86-வது வயதில், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல சிக்கல்களால் மறைந்த ரத்தன் டாடா பற்றிய சிறு தொகுப்பைப் இங்கே பார்க்கலாம்...

"உங்கள் மீது யாரேனும் கற்களை வீசி எறிந்தால், அதை வைத்து ஒரு கட்டடத்தை எழுப்புங்கள்"
ரத்தன் டாடா

வாழ்வில் சவால்களை எதிர்கொண்டு போராடும் எவருக்கும் உத்வேகம் அளிக்கும் ரத்தன் டாடாவின் இந்த வார்த்தைகளே அவரது வாழ்க்கையையும் சொல்லிவிடும்.

1961-ல் டாடா நிறுவனத்தில் ஒரு சாதாரண உதவியாளராகவே தனது பணியை தொடங்கினார் ரத்தன் டாடா. 1991ஆம் ஆண்டு ஜேஆர்டி (JRD TATA) டாடா ஓய்வுபெற்றபோது, ரத்தன் டாடாவை, டாடா சன்ஸ் என்ற பாரம்பரியமிக்க பெரும் குழுமத்தின் தலைவராக முன்மொழிந்தார். அப்போது ரத்தன் டாடாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க அந்நிறுவனத்தில் அதிகார மையத்தில் இருந்தவர்கள் யாரும் தயாராக இல்லை.

டாடா சன்ஸ் குழுமம்:

ஆனால் அதை துளியும் பொருட்படுத்தாமல், டாடா சன்ஸ் குழுமத்தை உலகளவில் கோலோச்சும் நிறுவனமாக்க உறுதிபூண்டார் ரத்தன் டாடா... அதை செய்தும் காட்டினார்..!

ஆம், இன்று டாடா குழுமம் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லிவிடும் அளவுக்கு அந்த விருட்சம், எங்கும் கிளை பரப்பி நிற்கிறது. டிசிஎஸ், டைட்டன், தனிஷ்க், ஃபாஸ்ட்ராக், வெஸ்ட்சைடு, ஹிமாலயன், பிக் பேஸ்கட், டாடா நியூ, க்ரோமா, தாஜ் என டாடாவின் நிறுவனங்கள் உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கின்றன.

தேயிலை நிறுவனமான டெட்லி, இரும்புத் துறையில் கோரஸ், ஆட்டோமொபைல் துறையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் கையகப்படுத்தியது டாடா. இதன் மூலம் ஒவ்வொரு துறையிலும் டாப் லிஸ்டில் இடம்பெற்றது டாடா.

நடுத்தர வர்க்க மக்களின் கனவை நனவாக்கியவர்!

ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் என நடுத்தர வர்க்க மக்களின் கனவை நனவாக்கியவரும் இவர்தான். ரத்தன் டாடா அறிமுகம் செய்த நானோ கார்தான், அப்போது உலகின் விலை குறைந்த கார். ரத்தன் டாடாவின் தலைமையில் டாடா நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை பரப்பி, 50 மடங்கு லாபம் குவித்தது. ரத்தன் டாடாவின் நிகர சொத்து மதிப்பு மட்டும் 3,800 கோடி ரூபாய்.

தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஏழை மக்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளின் நலத்திட்டங்களுக்காக கொடையாக வழங்கும் வழக்கம் உடையவர் ரத்தன் டாடா.

மனிதநேயத்தின் உருவம்!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 1,500 கோடி ரூபாயை வழங்கியது டாடா குழுமம். தனது மனிதநேய செயல்பாடுகளால் பொதுமக்களுக்கு பிடித்தமான தொழிலதிபராகவும் விளங்கியவர் ரத்தன் டாடா.

நாட்டின் வளர்ச்சிக்காக ரத்தன் டாடா ஆற்றிய பெரும்பணியை கவுரவிக்கும் விதமாக அவருக்கு பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகளை வழங்கியுள்ளது மத்திய அரசு.

தனது 10 வயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் ரத்தன் டாடா. திருமண வாழ்வில் இருந்து தூரம் நின்ற அவர், தாம் 4 முறை அந்த முடிவை எடுத்ததாகவும், பின்னர் ஏதேதோ காரணங்களால் அது கைகூடவில்லை என்றும் மனம் திறந்தார்.

தோற்பது அல்ல, முயற்சியே எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய தோல்வி....
சரியான முடிவுகளை எடுப்பதில் நம்பிக்கை கொள்பவன் அல்ல. எடுக்கும் முடிவுகளை சரியாக மாற்றுபவன் நான்...

என்ற பொன்மொழிகளை கூறியவர் ரத்தன் டாடா.. அவர் தனது வாக்கின்படியே வாழ்ந்தும் காட்டினார் என்பதே நிதர்சனம்...!