ஆந்திர முதலமைச்சர் - தமிழ்நாடு முதலமைச்சர் முகநூல்
இந்தியா

ஆந்திர முதல்வரை தொடர்ந்து மக்கள்தொகை குறித்து பேசிய தமிழ்நாடு முதல்வர்! என்ன காரணம்? விரிவான அலசல்..

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், குழந்தைப் பேறு குறித்து நேற்று பேசியிருக்கிறார். என்ன காரணம்? இது இரண்டையும் எப்படி பார்ப்பது? விரிவாக அறியலாம்...

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் மக்கள்தொகை குறித்து பேசி, குழந்தைப் பேறு விகிதம் அதிகரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், குழந்தைப் பேறு குறித்து நேற்று பேசியிருக்கிறார். இந்தியாவின் தெற்கு பகுதியில் இருக்கும் இரண்டு மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடுத்தடுத்து மக்கள் தொகை குறித்து பேசியிருக்கின்றனர் என்பதை அவ்வளவு சாதாரண விஷயமாக நாம் கடக்க முடியாது. ஏனெனில் இது இரண்டிற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது. அது என்ன என்பது பற்றி விரிவாக இங்கே அறியலாம்...

ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் (அக். 20), அமராவதி நகரில் கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்துப் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் கடந்த சில வருடங்களாகவே குறைந்து வருகிறது. ஆந்திரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். வருங்காலத்தில் தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் தம்பதிகள் இப்போதே அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்.

தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு வீதம் 1.6 ஆக குறைந்து விட்டது. இது நாட்டின் சராசரியான 2.1-ஐ விட குறைவாக உள்ளது. அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர யோசனை நடைபெற்று வருகிறது.

சந்திரபாபு நாயுடு

மக்கள் தொகை அதிகமாக இருப்பதன் பலன் (demographic dividend) 2047வரைதான் நமக்குக் கிடைக்கும். 2047க்குப் பிறகு, ஆந்திர மாநிலத்தில் இளைஞர்களைவிட வயதானவர்களே அதிகம் இருப்பார்கள்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், நேற்று (21.10.2024) அறநிலைத்துறை ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தானொரு விதமாக குழந்தைப்பேறு குறித்து பேசினார்.

அதில், பேசிய அவர், "மணவிழாவை முடித்து நீங்கள் உங்கள் செல்வங்களை பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள். முன்பெல்லாம் செல்வங்கள் என்று சொல்லும் போது, 16ம் பெற்று, பெரு வாழ்வு வாழ் என்று சொல்வார்கள். அதிலுள்ள 16 என்பது 16 குழந்தைகள் அல்ல, 16 செல்வங்கள். ஆனால் சிலர் குழந்தைகள் என நினைத்துக்கொள்வதுண்டு.

இருப்பினும் இப்பொழுது பலரும் வாழ்த்துக்குகூட ‘16ம் பெற்று’ என வாழ்த்துவதில்லை. ‘அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்’ என்றுதான் சொல்லி வாழ்த்திருகிறார்கள். இருப்பினும், ‘இப்போது நாடாளுமன்றத் தொகுதிகளில்யெல்லாம் குறையும் என்று நிலை வருகின்ற போது, நாம் மட்டும் எதற்கு அளவோடு பெற்று வளமோடு வாழவேண்டும்? நாமும் 16 குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாமே’ என்று சிலர் சொல்லக்கூடிய நிலை வந்திருக்கிறது. அதையும் நாம் மறந்துவிடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இவை இரண்டிலுமே முக்கியமான 2 விஷயங்கள் உள்ளன. அவை, தொகுதிப் பங்கீடு மற்றும் முதியோர் எண்ணிக்கை உயர்வு (எ) இளையோர் எண்ணிக்கை குறைவு. இதுகுறித்து விரிவாக பார்க்கும் முன், முக்கியமான ஒரு தரவை இங்கே காணலாம்...

தரவுகள் சொல்வதென்ன?

கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி, 'Precursor to Census 2024: The Fine Prints of a Rapidly Changing Nation' என்ற ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

SBI ஆய்வறிக்கை

அதன்மூலம், 2024-ல் மக்கள் தொகையில் வட மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்றும், தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக இருக்கும் என்றும் புரிந்துக்கொள்ள முடிந்தது. அந்த ஆய்வறிக்கை,

  • தென் மாநிலங்களில் மக்கள் தொகையானது 15 - 12 % குறையும்.

  • வடமாநிலங்களில் மக்கள் தொகையானது 27 - 29 % அதிகரிக்கும்.

  • இந்தியாவின் நடுத்தர வயது 28-29 ஆகவும், இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

என்று கூறுகிறது.

முதியார் உயர... இளையோர் சரிய... என்ன செய்யும் இந்தியா?

இந்தியாதான் தற்போது உலகிலேயே அதிக இளைஞர்களுள்ள மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில், இன்னும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வது, பொருளாதார - வேலைவாய்ப்பு சிக்கல்களை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்பதால்... குழந்தைப் பேறு விகிதத்தை உயர்த்துவது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. இதை பல கட்ட ஆலோசனைக்கு பின்புதான் கூற முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

சிலர் குழந்தைப் பேறு விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று சொல்ல, ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர்கள் சொல்லும் முக்கிய விஷயம்...

“பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை மட்டுமே குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆக, முதியோர் எண்ணிக்கை உயரும்; இளையோர் எண்ணிக்கை குறையும். இந்தியாவில் தற்போது வரை, ‘முதியோர் நலன்’ அதிகம் கவனப்படவில்லை என்கையில், முதியோர் உயர... இளையோர் சரிய... அடுத்த சிக்கல் தொடங்கும்! கவனித்துக் கொள்ள ஆளின்றி... பராமரிக்க மனமின்றி பல முதியோர் சிரமப்படுவர். இன்னொரு புறம், குறைவான சதவித இளையோர் நாட்டுக்கு தேவையான அளவு உழைக்க முடியாமல் திணறுவர். ஆகவே குழந்தைப் பேறு விகிதத்தை உயர்த்த வேண்டும். அப்படியாகும்போது இளையோரும் அதிகரிப்பர்; முதியோரும் கவனிக்கப்படுவர்” என்பது.

சரி, அடுத்த விஷயத்துக்கு வருவோம். முதல்வர்கள் இதை வலியுறுத்த என்ன காரணம்? வல்லுநர்கள் இதுபற்றி கூறுகையில், “அந்தந்த மாநில தலைவர்களின் மக்கள் தொகை குறித்த கருத்துகள், ‘வரிப்பகிர்வு’ மற்றும் ‘தொகுதி மறுசீரமைப்பு’ ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. மக்கள் தொகை உயர்வை அரசியல் நோக்கத்திலும் பார்ப்பதும் கட்டாயம்” என்கிறார்கள்.

இந்தப் பிரச்னைகள் யாவும், இந்தியாவுக்கு மட்டுமல்ல... குழந்தைப் பேறு விகிதம் குறையும் எல்லா நாடுகளும் உண்டு. எனில் அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று பார்த்தால்...

சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய ஆசிய நாடுகளிலும், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை (முதியோர் அதிகரிக்கும்போது, அவர்களின் உடல் தீவிர உழைப்புக்கு ஒத்துழைக்காது என்பதால், இளையோர் எண்ணிக்கை உழைப்போரின் எண்ணிக்கையாக கருதப்படுகிறது) குறைந்து வருவதை தடுக்க, மக்கள் தொகையை பெருக்கும் நடவடிக்கைகள்தான் எடுக்கப்பட்டுள்ளன.

ஆக, அப்படியொரு முயற்சியாகவே தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டு முதலமைச்சர்களின் கருத்துக்கள் கருதப்படுகிறது. அதோடு, கூடுதல் கொஞ்சம் அரசியல் நோக்கமும் உள்ளது என்பது மறுப்பதற்கல்ல!