ரத்தன் டாடா உடலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை புதிய தலைமுறை
இந்தியா

RIP Ratan Tata | பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ரத்தன் டாடா உடல்... தேசிய கொடி போர்த்தி மரியாதை!

ஜெனிட்டா ரோஸ்லின்

வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று (09.10.2024) இரவு 11.30 மணி அளவில் தனது 86 வயதில் காலமானார்.

தனது வருமானத்தின் பெரும் பகுதியை மனிதநேய செயற்பாடுகளுக்கு வழங்கியவர் ரத்தன் டாடா. ஒரு லட்சம் ரூபாய்க்கு காரை அறிமுகம் செய்து நடுத்தர வர்க்க மக்களின் கனவை நனவாக்கியவர். மனிதர்களுக்கு மட்டுமல்லாது மிருகங்களுக்கும் அடைக்கலம் வழங்கிய மாண்பாளர். ஒட்டுமொத்தத்தில் மனிதநேயவாதிகாக தனது வாழ்நாளை கழித்த இவர், நேற்று இவ்வுலகை விட்டு பிரிந்தது இந்தியாவிற்கு பெரும் இழப்பாக மாறியுள்ளது.

“மற்றவர்கள் உங்களை நோக்கி எறியும் கற்களை எடுத்துக் கொண்டு ஒரு நினைவு சின்னத்தை கட்டியெழுப்புங்கள்” என்ற ரத்தன் டாடாவின் உத்வேக வார்த்தைகளை யாராலும் மறக்க முடியாது.

இப்படி, தன் வாழ்க்கை மட்டுமல்லாது, பிறருடைய வாழ்க்கை உயர்வுக்கும் ஏதாவது ஒரு காரண கர்த்தாவாக இருந்தவர் அவர். இப்படிப்பட்டவருக்கு இறந்தபின்னும் மரியாதை செலுத்தும் விதமாக அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முன்னதாக அறிவித்திருந்தார். மேலும், இன்று மகாராஷ்டிராவில் துக்க நாள் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தவகையில், ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மும்பையின் நரிமன் பாய்ண்ட் பகுதியில் உள்ள என்.சி.பி.ஏ.,அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதையும் செய்துள்ளனர்.