ரத்தன் டாடா கோப்புப்படம்
இந்தியா

செல்ல பிராணிக்காக பிரிட்டீஷ் மன்னர் வழங்கிய விருதை உதறிய ரத்தன் டாடா! வியக்க வைக்கும் பண்பு

PT WEB

செய்தியாளர்: விமல்

உலகின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் , தொழிலதிபர்கள் மட்டுமின்றி சாதாரண ஏழை மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய ரத்தன் டாடா பிசினஸ் மட்டுமின்றி உயிர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தான் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் துடித்து போய்விடும் அளவுக்கு பாசம் கொண்டவர் ரத்தன் டாடா..ஒருமுறை தான் வளர்த்து வந்த செல்ல நாய்க்காக அவர் செய்த ஒரு செயல் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

ரத்தன் டாடா உடலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை

தற்போதைய பிரிட்டிஷ் மன்னரும் அப்போதைய வேல்ஸ் இளவசரருமான சார்லஸ் 2018 ஆம் ஆண்டு, ரத்தன் டாடாவின் தொண்டு நிறுவன சேவைக்காக அவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விழா, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற இருந்தது. விழாவில் கலந்துகொண்டு விருதைப் பெற ஒப்புக்கொண்டிருந்தார் ரத்தன் டாடா.

லண்டன் கிளம்பும் நாள் நெருங்கி வந்த போது, திடீரென அவரது வளர்ப்பு நாய் உடல்நிலை சரியில்லாமல் இறக்கும் நிலைக்கு சென்றது. இதனால் பதறிப்போன ரத்தன் டாடா, பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழாவை ரத்து செய்து விட்டு நாயை கவனிக்க தொடங்கினார்.

பின்னர், பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு முறைப்படி தகவலும் தெரிவித்துள்ளார் ரத்தன் டாடா.

இதனையடுத்து, ரத்தன் டாடா வர இயலாத உண்மையான காரணம் மன்னர் சார்லஸு க்கு தெரியவரவே, அப்போது அவர் ரத்தன் டாடா குறித்து பெருமையாக பேசியுள்ளார். இதனை தொழிலதிபர் சுஹேல் சேத் என்பவர் காணொளி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

தனது வளர்ப்பு நாய்களான டிட்டோ மற்றும் டேங்கோ இரு செல்லப்பிராணிகளின் மரணம் தன்னை எப்படிப் பாதித்தது என்பதைப் பற்றி அப்போது பேசிய ரத்தன் டாடா, "செல்லப்பிராணிகளாக நாய்கள் மீதான எனது அன்பு எப்போதும் அதிக பிணைப்பு கொண்டது. இது நான் உயிருடன் இருக்கும் வரை தொடரும்.

எனது செல்லப்பிராணிகள் இறந்து போவது விவரிக்க முடியாத சோகம். அது இயற்கையின் மற்றொரு நிகழ்வு என என்னால் கடந்து செல்ல முடியாது. அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு என் வீடு மிகவும் வெறிச்சோடி காணப்படும். அவர்கள் இல்லாமல் நான் வாழ முடியாதபடி அமைதியாக மாறுகிறது" என உருக்கமாக கூறியிருந்தார்.