இந்தியா

வெளிநாட்டிலிருந்து நன்கொடை: அனுமதிகோரி ராமர் கோயில் அறக்கட்டளை விண்ணப்பம்

வெளிநாட்டிலிருந்து நன்கொடை: அனுமதிகோரி ராமர் கோயில் அறக்கட்டளை விண்ணப்பம்

Veeramani

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வெளிநாட்டு நன்கொடைகளை பெற மத்திய அரசிடம் அனுமதிகோரி ஸ்ரீ ராம்ஜன்மபூமி தீர்த்தக்ஷேத்ரா அறக்கட்டளை விண்ணப்பித்துள்ளது என்று அறக்கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் நன்கொடைகளை அறக்கட்டளைக்கு அனுப்பத் தொடங்கியுள்ளதாக அதன் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா தெரிவித்தார். கடந்த செவ்வாயன்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க குடிமகனிடமிருந்து 1,500 டாலர் காசோலையை அலுவலகம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

“ராமர் கோயிலுக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அடிக்கல்நாட்டுவிழா நடந்ததிலிருந்து, நன்கொடைகள் அதிகளவில் பெறப்பட்டு வருகின்றன, மேலும் அறக்கட்டளையின் நிதி ரூ .75 கோடியாக உயர்ந்துள்ளது. இப்போது ராமர் கோயில் அறக்கட்டளை நாட்டில் உள்ள பக்தர்களிடமிருந்து வழக்கமான நன்கொடைகளைப் பெற்று வருகிறது. மேலும் வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் காசோலைகள் மூலமாகவும் நன்கொடை அளிக்கின்றனர்" என்றும் குப்தா கூறினார்.

"இதனால் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற அறக்கட்டளை சார்பாக இந்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். விரைவில் அனுமதி வழங்கப்படலாம், அதன் பிறகு அறக்கட்டளை பஞ்சாப் நேஷனல் வங்கியில் என்ஆர்ஐ கணக்கைத் திறக்கும்" என்று அவர் கூறினார்.