இந்தியா

மண்ணில் புதைத்து கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்

rajakannan

ராஜஸ்தான் மாநிலத்தில் தங்களை தாங்களே மண்ணில் புதைத்து கொண்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தானில் வீடு கட்டும் திட்டத்திற்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜெய்ப்பூர் நகருக்கு அருகில் உள்ள நீந்தர் என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் மண்ணில் குழி தோண்டி, அதில் பாதி அளவு தங்களை புதைத்துக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சுமார் 1350 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலும் விவசாய நிலங்கள் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு வாரத்திற்கும் மேலாக அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.