இந்தியா

கான்க்ரீட் தளம் உடைந்து சாக்கடைக்குள் விழுந்த இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

ஜா. ஜாக்சன் சிங்

ராஜஸ்தானில் கடைக்குள் இருந்து பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள், கான்கீரீட் தரைதளம் உடைந்ததால் அடியில் இருந்த சாக்கடைக்குள் விழுந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சலேமர் பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் கடை ஒன்று இயங்கி வருகிறது. பொதுவாக, இதுபோன்ற மெக்கானிக் கடைகள் சாக்கடையின் மேல் தளத்தில் அமைக்கப்படுவது வழக்கம். அப்போதுதான், மோட்டார் சைக்கிள்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர், அப்படியே சாக்கடைக்குள் சென்றுவிடும். அந்த வகையில், மேற்குறிப்பிட்ட கடையும் அங்கிருந்த பாதாள சாக்கடையின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதியன்று, அந்தக் கடையில் வழக்கம் போல மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களும், மெக்கானிக் ஊழியர்களும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் நின்றுக் கொண்டிருந்த கான்க்ரீட் தரைதளம் பாரம் தாங்காமல் உடைந்தது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த 5 பேரும் தரைக்கு அடியில் இருந்த சாக்கடைக்குள் நுழைந்தனர். இந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து அவர்கள் அனைவரையும் மீட்டனர்.

video source: NDTV

அதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் சாக்கடையில் அதிக அளவில் கழிவு நீர் இல்லாததால் அவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இதனிடையே, அவர்கள் சாக்கடைக்குள் விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.