ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு புதிய தலைமுறை
இந்தியா

தொடக்க சம்பளமே 35,000 ரூபாய்.. இளைஞர்களுக்கு வந்த GOOD NEWS!

யுவபுருஷ்

ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே துறையில், பணியில் சேர்வதென்பது நாடு முழுவதும் இருக்கும் படித்த இளைஞர்களின் கனவாக இருக்கிறது. ரயில்வே துறைகளில் அவ்வப்போது காலியாகும் பணியிடங்கள், ஆண்டுதோறும் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு முறைப்படி நிரப்பப்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வே

அந்த வகையில், ரயில்வேயில் காலியாக உள்ள 7,951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கெமிக்கல் சூப்பர் வைசர் மற்றும் உலோகவியல் மேற்பார்வையாளருக்கு 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜூனியர் என்ஜினியர், டிப்போ மெட்டீரியர் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல் மெட்டலர்ஜிக்கல் உதவியாளர்களுக்கு 7,934 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி

ஜூனியர் என்ஜினியர் வேலைக்கு டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்தவர்கள் டெப்போ மெட்டிரியல் கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இயற்பியல் மற்றும் வேதியல் பாடங்களை உள்ளடக்கிய பட்டங்களில் 45 மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றவர்கள் கெமிக்கல் மற்றும் மெட்டலர்ஜிக்கல் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

இவை அனைத்திற்கும் வயது வரம்பு 18 முதல் 36 வரையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விதிகளின் படி வயது உச்சவரம்பில் SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு கொடுக்கப்படுகிறது.

இந்த பணிகளுக்கான தொடக்க சம்பளமாக 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் வரும் 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை ஆன்லைனியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு முடிந்து தேர்ச்சி பெற்றபின் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதன்பின் மருத்துவ தேர்வுகள் நடத்தப்படும்.

விரிவான விவரங்களுக்கு: https://www.rrbchennai.gov.in