இறந்த பயணி புதியதலைமுறை
இந்தியா

எர்ணாகுளம் | மிடில் பெர்த் விழுந்ததில் பயணி மரணித்த சம்பவம் - ரயில்வே நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

Jayashree A

கேரளா மாநிலம் மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான் (62). இவர் வேலை விஷயமாக கடந்த வாரம் மலப்புரத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் எண் 12645 எர்ணாகுளம் விரைவு ரயிலில் பயணித்துள்ளார்.

பயணத்தில் அவருக்கு கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகவே தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இரவு உணவை முடித்துக்கொண்டு படுத்து தூங்கியிருக்கிறார்.

இரவில் ரயிலானது தெலங்கானா மாநிலம் வாரங்கல் என்ற இடத்தை கடக்கும்பொழுது, எதிர்பாராதவிதமாக, மரத்திகா அலிகான் படுத்திருந்த இருக்கைக்கு மேல் இருந்த மிடில் பெர்த்தானது உடைந்து அவர் மேல் விழுந்து இருக்கிறது. இதில் அவருக்கு கழுத்து எலும்புகள் உடைந்து நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே அவரது கை கால்கள் செயலிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட ரயில்வே மீட்பு படையினர், வாராங்கால் ராமகுண்டத்தில் ரயிலை நிறுத்தி காயமடைந்த அலிகானை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அலிகான் இறந்தார்.

இந்நிலையில் அலிகான் இறப்பிற்கு ரயில்வே நிர்வாகம்தான் பொறுப்பு என்றும், இச்சம்பவத்திற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

தற்பொழுது இது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி “விபத்து நடந்த ஸ்லீப்பர் கோச்சின் மிடில் பெர்த்தில் எந்தப் பழுதும் இல்லை. மிடில் பெர்த்தில் இருந்த பயணி சீட் செயினை சரியாக இணைக்காமல் விட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எர்ணாகுளம் விரைவு ரயிலின் S6 கோச்சின் 57 கீழ் பெர்த்தில் அலிகான் இருந்திருக்கிறார். அப்போது மிடில் பெர்த்தில் இருந்த பயணியின் டிக்கெட் அப்க்ரேட் ஆனதால் அவர் மூன்றாவது ஏசி கோச்சுக்கு மாறியுள்ளார். இதையறிந்த மிடில் பெர்த் பயணி அவசரத்தில் சீட்டின் சங்கிலியை சரியாகப் பொருத்தவில்லை; அப்படியே இறங்கி சென்றுள்ளார்” என்று கூறியுள்ளது.

முன்னதாக நிஜாமுதீன் ஸ்டேஷனில் விபத்து நடந்த இருக்கை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதன் முடிவில்தான் இருக்கையில் எந்த சேதமுமில்லை என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.