இந்தியா

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ரயில்வே பாலம்

webteam

ஒடிசா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் நாகவல்லி ஆற்றின்மீது கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் கனமழை பெய்துவருகிறது. இதனால், அம்மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அசாம், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. 

இந்தநிலையில், ஒடிசா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் நாகவல்லி மற்றும் கல்யாணி போன்ற மாநிலத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாகவல்லி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ராயகடா மாவட்டத்தில் ரயில்வே பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. ஒடிசாவின் தற்போதைய சூழல் குறித்து மாநில அரசு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.