rahul gandhi x page
இந்தியா

கோவா விவகாரம் | தொடரும் போராட்டம்.. பாஜகவைச் சாடிய ராகுல் காந்தி!

Prakash J

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவரான பாஸ்கர் வெலிங்கர், “புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் என நம்பப்படும் உடலின் அடையாளத்தை சரிபார்க்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும்” எனப் பேசியிருந்தார். கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் பரப்பியவர்களில் முக்கியமானவர் புனித பிரான்சிஸ் சேவியர். ஸ்பெயினைச் சேர்ந்த இவரின் உடல், கோவாவில் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியரின் உடல், அடுத்த மாதம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இந்தச் சூழலில்தான்

“புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் என நம்பப்படும் உடலின் அடையாளத்தை சரிபார்க்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும்”
பாஸ்கர் வெலிங்கர்

என பாஸ்கர் வெலிங்கர் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது. புனித பிரான்சிஸ் சேவியர் குறித்து சர்ச்சையாக பேசியதற்காக ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாஸ்கர் வெலிங்கரை கைதுசெய்யக் கோரி, கோவாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் வெலியங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார்.

இதையும் படிக்க: சிலமணி நேரத்தில் 600 பேர் கொன்றுகுவிப்பு.. ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகள் அட்டூழியம்! #ViralVideo

இந்த விவகாரம் தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர், “கோவாவின் ஈர்ப்பு, அதன் இயற்கை அழகு, மாறுபட்ட மற்றும் இணக்கமான மக்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் உள்ளது. ஆனால், துர்திர்ஷ்டவசமாக அங்கு நடைபெறும் பாஜக ஆட்சியில், இந்த நல்லிணக்கம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

பாஜக வேண்டுமென்றே வகுப்புவாதத்தைத் தூண்டி மதநல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சி செய்கிறது. இந்தியா முழுவதும், உயர்மட்டங்களின் ஆதரவுடன் சங் பரிவார்கள் இதேபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ராகுல் காந்தி

பாஜக வேண்டுமென்றே வகுப்புவாதத்தைத் தூண்டி மதநல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சி செய்கிறது. இந்தியா முழுவதும், உயர்மட்டங்களின் ஆதரவுடன் சங்பரிவார்கள் இதேபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மக்களைப் பிளவுபடுத்தும் அதேவேளையில் கோவாவின் இயற்கை மற்றும் சமூக பாரம்பரியத்தின் மீதான தாக்குதலையும் பாஜக நடத்திவருகிறது. பாஜகவின் முயற்சிகள் ஒருபோதும் கைவிடப்படாது. கோவா மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும், பாஜகவின் பிளவுபடுத்தும் கொள்கைக்கு எதிராக ஓரணியில் திரள்வார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து முழுத் தகவலையும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கலாம்...