model image freepik
இந்தியா

”மூச்சுவிடக் கூட..”|அதிக பணிச்சுமையால் இளம்பெண் மரணம்.. புனே நிறுவனத்திற்கு தாயார் உருக்கமான கடிதம்!

Prakash J

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர், அன்னா செபாஸ்டியன் பேராயில். 26 வயது இளம்பெண்ணான இவர், பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங்-கில் (EY) பட்டயக் கணக்காளராக, கடந்த மார்ச் 19ஆம் தேதி பணிக்குச் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 20ஆம் தேதி பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன், கட்டிலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அன்னா உயிரிழந்து 2 மாதங்களாகும் நிலையில், அவர் பணிபுரிந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு அன்னாவின் தாயார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

model image

அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் மேமானிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அன்னாவின் முதல் பணி இது. உங்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிய மிகுந்த ஆவலுடன் இருந்தார். ஆனால், 4 மாதங்களிலேயே அதிக பணிச் சுமையால் உயிரிழந்துள்ளார். இரவு நீண்டநேரமும், வார இறுதி நாள்களிலும் வேலை செய்துள்ளார். பெரும்பாலான நாள்கள் மிகவும் சோர்ந்து போய் விடுதிக்குத் திரும்பியுள்ளார். புதிதாக பணிக்கு ச்சேர்ந்தவருக்கு முதுகெலும்பு உடையும் அளவுக்கான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரியில், அன்னா முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவார். பட்டயக் கணக்காளர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். உங்கள் நிறுவனம் கொடுத்த அனைத்துப் பணிகளையும் சோர்வின்றிச் செய்தார்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: குடும்பங்கள் கொண்டாடிய Tupperware-க்கு இப்படியொரு நிலையா? திவால் நிலைக்குச் சென்ற துயரம்!

மேலும் அதில், “இருப்பினும், பணிச்சுமை, புதிய சூழல் மற்றும் நீண்டநேரப் பணி உள்ளிட்டவை, அவரை உடல் மற்றும் மனரீதியாக பாதித்தது. இந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த பல ஊழியர்கள், பணிச்சுமை தாங்காமல் ராஜினாமா செய்துள்ளனர். அன்னாவின் மேலாளர் தொடர்ந்து பணி நேரம் முடிந்தபிறகு அவருக்கு வேலை ஒதுக்கியுள்ளார். கூடுதல் நேரம் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இரவு நேரம் மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிபுரிய வைத்துள்ளனர். அன்னாவின், தகுதிக்கு மீறிய பல்வேறு பணிகளும் வழங்கப்பட்டுள்ளது. வாய்மொழியாக பல பணிகள் ஒதுக்கப்படுவதாக எங்களிடம் அவர் தெரிவித்தார். மூச்சுவிடக் கூட நேரம் வழங்கவில்லை” என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதில், “அன்னாவின் இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. அவரது மேலாளருக்கு தகவல் கொடுத்தும் பதில் இல்லை. எனது குழந்தையின் உயிரிழப்பு, அந்த நிறுவனத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம். தாங்கள் அடைந்த துயரமும், அதிர்ச்சியும் வேறு குடும்பத்தால் தாங்க முடியாது” என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார்.

model image

அந்தக் கடிதம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அந்தக் கடிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக கூறியுள்ள நிறுவனம், "அன்னா செபாஸ்டியனின் அகால மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். மேலும் அன்னாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது. மேலும் அது, தமது நிறுவனத்தின் தணிக்கை குழுவில் அண்ணா ஓர் அங்கமாக இருந்ததாக எர்ன்ஸ்ட் & யங் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: நேற்று பேஜர்.. இன்று வாக்கி-டாக்கி.. லெபனானில் தொடரும் தாக்குதல்.. விசாரணையில் வெளிவந்த புது தகவல்!