street dogs file image
இந்தியா

புதுச்சேரி: சாலையில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்கள் - பெண் உட்பட 5 பேர் காயம்!

webteam

செய்தியாளர்: ரகுமான்

புதுச்சேரியில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தெரு நாய்களின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் சாலையோரம் செல்பவர்களை துரத்தி துரத்தி கடித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த கர்த்திகேயன், வேல்முருகன் நகரில் சிவா, டான் பஹதூர், கண்ணன், மீனா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் துரத்திக் கடித்ததில் காயமடைந்தனர்.

Health center

இதையடுத்து காயமடைந்தவர்கள், இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுச்சேரியை பொறுத்தவரை கடந்த ஆண்டு மட்டும் 26,113 பேரை நாய்கள் கடித்துள்ளன. இந்தாண்டு இதுவரை 6,532 பேர் தெரு நாய்கள் கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.