rahul gandhi x page
இந்தியா

மினிமம் பேலன்ஸ் இல்லை... 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல்.. ராகுல் காந்தி கண்டனம்!

Prakash J

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது, இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

குறைந்தபட்ச இருப்புத்தொகையானது வங்கி கணக்கின் தன்மை மற்றும் வங்கி இயங்கும் பகுதியைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. எனினும், முறையான மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்தால், அடுத்தமுறை வங்கிக் கணக்குகளில் இருந்து பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது அதிலிருந்து அபாரதத் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தமுடியாத நிலையும் ஏற்படவே செய்கிறது.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 பொதுத் துறை வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 8,500 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில்

  • பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.1,538 கோடி),

  • இந்தியன் வங்கி (ரூ.1,466 கோடி),

  • பாங்க் ஆஃப் பரோடா (ரூ.1,250 கோடி),

  • கனரா வங்கி (ரூ.1,157 கோடி),

  • பாங்க் ஆஃப் இந்தியா (ரூ.827)

உள்ளிட்ட வங்கிகளில் அதிகபட்சமாக அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடந்த 2019-20 ஆகிய ஆண்டில் மட்டும் ரூ. 640 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பிந்தைய வருடங்களில் அவ்வங்கியானது அபராதத் தொகையை வசூலிக்கவில்லை.

மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 2,331 கோடி மினிமம் பேலன்ஸ் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 25 சதவிகிதம் அதிகமாகும். குறைந்தபட்ச இருப்புத் தொகை அபராதம் குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வ பதிலளித்ததன் வாயிலாக இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒடிசாவில் ஒரு காதல் சின்னம்! ஜப்பான் பெண்ணும் இந்திய ஆணும் கட்டிய ஹோட்டல்.. மகன் பகிர்ந்த சுவாரஸ்யம்

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன. தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு, 'மினிமம் பேலன்ஸ் இல்லை' எனக் கூறி ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூல் செய்துள்ளது.

மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சியாக மோடியின் சக்கர வியூகத்தில் திறக்கப்பட்ட கதவுதான் இந்த அபராத நடைமுறை. இந்திய மக்கள் அபிமன்யூக்கள் அல்ல, அர்ஜுனர்கள் என புரிந்துகொள்ளுங்கள். சக்கர வியூகத்தை உடைத்து உங்களது எல்லா அட்டூழியங்களுக்கும் எப்படி பதில் தர வேண்டும் என மக்களுக்கு தெரியும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பாரீஸ் ஒலிம்பிக்ஸ் | ரயில் சேவை பாதிப்பு.. தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதம்.. காத்திருக்கும் புயல்?