சட்டீஸ்கர் எக்ஸ் தளம்
இந்தியா

சட்டீஸ்கர் | வனப்பகுதியில் மரங்களை வெட்டும் அதானி குழுமம்.. கிளம்பிய எதிர்ப்பு.. வெடித்த வன்முறை!

சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பழங்குடியினருக்கும் போலீஸுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Prakash J

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஹஸ்டியோ என்ற வனப்பகுதி உள்ளது. இங்கு பழங்குடி இனத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வனப்பகுதியில் அதானி குழுமம் நிர்வகித்து வரும் பார்சா நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பாஜக அரசின் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த பார்சா நிலக்கரித் திட்டத்தின் சுரங்க பணிகளை, அதானி குழுமம் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்தச் சூழலில், அப்பகுதியில் 6 கிராமங்களில் உள்ள சுமார் 5,000 மரங்களை அகற்ற அதிகாரிகள் முயன்றுள்ளனர். இதனை எதிர்த்து நேற்று பழங்குடியின மக்கள் பெரிய அளவில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த மோதலில் இருதரப்பிலும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மரங்களை வெட்டும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். மேலும் அங்கு வாழும் பழங்குடியினரைக் கட்டுப்படுத்த 350 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: தொடரும் மோதல்|சாலைகள் வெடிவைத்து தகர்ப்பு.. தென்கொரியாவை முதல்முறையாக எதிரிநாடாக அறிவித்த வடகொரியா!

பர்சா சுரங்கத் திட்டம் மூலம் 700 மக்கள் இடம்பெயரக்கூடும் எனவும், சுமார் 840 ஹெக்டேர் அளவிலான அடர்ந்த மரங்கள் அழிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தச் சுரங்கத்திற்கான வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் போலி ஆவணங்களின் அடிப்படையில் இருப்பதாக அந்த ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுவதுடன், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே பழங்குடியினர் தாக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுபோல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர், “நாடு முழுவதும் பழங்குடியினரை ஒடுக்குவது பாஜகவின் கொள்கையாகிவிட்டது. அதானிஜியின் சுரங்கங்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக பல நூற்றாண்டுகளாக காடுகளின் உரிமையாளர்களாக இருந்த பழங்குடியினர் வெளியேற்றப்படுகிறார்கள். பழங்குடியினப் பகுதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணை சத்தீஸ்கரில் ஒழிக்கப்பட்டதா” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: உக்ரைன் போர்|’ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய 12,000 வடகொரிய ராணுவ வீரர்கள்’- தென்கொரியா குற்றச்சாட்டு