ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே pt web
இந்தியா

காஷ்மீர் தொடங்கி கர்நாடகா வரை காங்கிரஸ் கட்சி சந்திக்கும் சிக்கல்கள்.. கார்கே, ராகுல் திட்டம் என்ன?

10 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது காங்கிரஸ். ஆனால் காஷ்மீர் தொடங்கி கர்நாடகா வரை பல்வேறு மாநிலங்களில் அக்கட்சி சிக்கல்களை சந்தித்து வருகிறது.

PT WEB

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸில் சலசலப்பு

முந்தைய 2 மக்களவை தேர்தல்களைக் காட்டிலும் இந்தாண்டு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்ற காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக்கொண்டுள்ளது. அக்கட்சி தேசிய அரசியலில் மீண்டெழுகிறதா என்றும் கேள்விகள் எழுந்தன. ஆனால் மாநில ரீதியாக பார்த்தால் காங்கிரஸ் சிக்கல்களை சந்தித்து வருவது புலனாகிறது.

காஷ்மீரில் பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கைகோத்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஆனால் காங்கிரசின் தேர்தல் பணிகள் உற்சாகம் தரவில்லை எனக் குறைகூறுகிறார் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா. பரப்புரையில் காங்கிரஸ் உயர் மட்டத் தலைவர்களும் பங்கேற்கவில்லை என அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

பூபிந்தர் சிங் ஹூடா

இரு கட்சிகளுக்கும் நட்புறவு வலுவாக இல்லை என்றும் தகவல்கள் உள்ளன. தேர்தல் நடக்கும் மற்றொரு மாநிலமான ஹரியானாவிலும் காங்கிரஸில் சலசலப்புகள் இருக்கின்றன. இம்முறை காங்கிரஸ் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் முதல்வர் வேட்பாளர் பூபிந்தர் சிங் ஹூடா, 2ஆம் நிலை தலைவர்களை புறக்கணிப்பதாக விமர்சனங்கள் உள்ளன. இந்த மனக்குறையாலோ என்னவோ மூத்த காங்கிரஸ் தலைவரான குமாரி செல்ஜா பரப்புரைக் கூட்டங்களில் தென்படவே இல்லை. ஆளும் பாஜக மீதுள்ள மக்களின் அதிருப்தி, ஆதரவு வாக்குகளாக கனியக்கூடிய சூழலில் உட்கட்சி பூசல்கள் தங்களுக்கு பின்னடைவாக உள்ளதாகக் கூறுகின்றனர் அம்மாநில காங்கிரஸ் தொண்டர்கள்.

என்ன செய்யப்போகிறார்கள் ராகுலும் கார்கேவும்

இமாசல பிரதேசத்திலோ வேறு ஒரு மாதிரியான பிரச்னை. உத்தரப்பிரதேசத்தில் உணவகங்களில் உரிமையாளர்கள் பெயர்களை எழுதிவைக்க யோகி ஆதித்யநாத் போட்டது போன்ற உத்தரவு காங்கிரஸ் ஆளும் இமாசல பிரதேசத்திலும் பிறப்பிக்கப்பட்டது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. அமைச்சர் விக்ரமாதித்ய சிங்கின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

முதலமைச்சர் சித்தராமையா

காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதிலேயே பெரிய மாநிலம் கர்நாடகா. இங்கு முதலமைச்சர் சித்தராமையாவின் நிலை நில முறைகேடு வழக்கில் சிக்கலானதாகவே உள்ளது. முதல்வர் நாற்காலிக்கு நீண்ட நாட்களாக குறிவைத்திருக்கும் டி. கே.சிவக்குமார் இந்த தருணத்தை தனதாக்கிக் கொள்வாரா... இந்தச் சூழலை தனக்கு சாதகமாக திருப்ப பாஜக முயற்சிக்குமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. சிக்கல்களை களைந்து கட்சியை சுமுகமாக நடத்திச்செல்ல மல்லிகார்ஜுன் கார்கேவும் ராகுல் காந்தியும் என்ன செய்யப்போகிறார்கள்?