இந்தியா

உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் அயோத்தி நில ஊழல் விசாரணை: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் அயோத்தி நில ஊழல் விசாரணை: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

JustinDurai
அயோத்தி ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமர் கோயிலுக்காக அயோத்தி பேக் பைசி கிராமத்தில் 1,208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும், இதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாடியை சேர்ந்த மாநில முன்னாள் மந்திரி பவன்சிங் ஆகியோர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் அயோத்தி நில ஊழல் புகார் குறித்து உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த மார்ச் 18-ம் தேதி அயோத்தியில் ஒரு நிலத்தை 2 பேர் ரூ.2 கோடிக்கு வாங்கினர். அடுத்த 5 நிமிடங்களில் அதே நிலத்தை ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.18 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கியது. அதாவது ஒரு வினாடியில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதை யாராவது நம்ப முடியுமா? 2 பத்திர பதிவுகளிலும் சாட்சிகளாக கையெழுத்திட்டவர்கள் ஒரே நபர்கள்தான்.
விலை ஏறி விட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளை கூறுகிறது. அந்த பகுதியில் நிலத்தின் விலை ரூ.5 கோடிதான் இருக்கும். ஏனென்றால், அது ராமர் கோயில் வளாகத்தில் இருந்து தூரத்தில் உள்ளது. கடவுள் நம்பிக்கையின் பெயரில் ஊழல் தேட வாய்ப்பு தேடுவது, கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில்தான் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. எனவே, இந்த நில ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.