இந்தியா

BRICS: வளர்ந்துவரும் நாடுகளுக்கு மத்தியில் ஆதிக்கமிக்கவர்களாக இருக்கிறோம் - பிரதமர் மோடி

Sinekadhara

BRICS (பிரேசில் - ரஷ்யா - இந்தியா - சீனா - தென் ஆப்பிரிக்கா) அமைப்பின் அதிபர்கள் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடத்தப்பட்டது. இதில் குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது குறித்தும், இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பது குறித்தும் கலந்துரையாடினர். இந்தக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனரோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த காணொளி கூட்டத்தில் பிரதமர் மோடி தனது கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ‘’ஐந்து நாடுகளின் அமைப்பான BRICS, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்த பதினைந்து வருடங்களில் இந்த அமைப்பை மேலும் ஆக்கப்பூர்வமானதாக மாற்றவேண்டும். மேலும் கடந்த ஒன்றரை தசாப்தத்தில் BRICS நிறைய சாதனைகளை படைத்திருக்கிறது. இன்று நாம் உலகின் வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளுக்கு மத்தியில் ஆதிக்கமிக்கவர்களாக இருக்கிறோம். மேலும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்துவதற்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கிறது’’ என்றார்.

இதில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பேசினார். ஆப்கான் அண்டை நாடுகளை அச்சுறுத்துவதாக உருவாகிவிடக்கூடாது என்றார். அது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தின் அடித்தளமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் பல தசாப்தங்களாக தங்கள் உரிமைக்காக போராடிவருவதால் தங்கள் நாடு எப்படியிருக்கவேண்டும் என வரையறுக்க அவர்கள் தகுதியானவர்கள் என்றும் தெரிவித்தார். மேலும், தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற ஒருமாதத்திலேயே கடுமையான படைவீரர்களை அமர்த்தியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காப்படைகள் வெளியேறியது உள்நாட்டு மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்பை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.