இந்தியா

’அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சிகள் செயல்படணும்’-பிரியா விடையில் ராம்நாத் கோவிந்த் உருக்கம்

webteam

அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கட்சிகள் செயல்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் ராம்நாத் கோவிந்திற்கு, நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் இரு அவைகளின் உறுப்பினர்கள் பிரியாவிடை வழங்கினர். அதில், நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். மிக உயரிய பொறுப்பை தனக்கு வழங்கியதற்காக நாட்டு மக்களுக்கும் ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்தார். புதிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் வழிகாட்டுதலில் நாடு இன்னும் உயர்ந்த நிலையை அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் 15-வது குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இதில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் பெற்று நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக பழங்குடியினப் பெண் ஒருவர் குடியரசு தலைவர் ஆவது இதுவே முதல்முறையாகும். இதனையடுத்து வரும் 25-ந் தேதி 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார்.