பிராங் வீடியோ எக்ஸ் தளம்
இந்தியா

பிராங்கால் ஏற்பட்ட விபரீத விளைவு.. மும்பை கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு!

Prakash J

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவலியில் குளோப் ஸ்டேட் என்ற கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் சிலர் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதில், நாகினா தேவி என்ற பெண்ணும் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நாகினா தேவி கட்டடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

அதேநேரத்தில் அவரது நண்பர்களில் ஒருவர், அதே சம்பவத்தில் இருந்து நூலிழையில் உயர் தப்பினார். இந்தக் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. பரபரப்பான இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மணப்பாடா காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

உயிரிழந்த நாகினா தேவி, அந்தக் கட்டடத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தவர் என்றும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. எதிர்பாராத மரணம், அவருடைய குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: இலங்கை தொடரில் ஓய்வு ஏன்| மனைவி, மகனுடன் செர்பியா புறப்பட்ட ஹர்திக்?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி?