இந்தியா

"ஆபாச வலைதளங்களே பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம்" - ராஜஸ்தான் அமைச்சர்

ஜா. ஜாக்சன் சிங்

"நாட்டில் நடைபெறும் பெரும்பாலான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆபாச வலைதளங்களே காரணம்" என்று ராஜஸ்தான் தொழில்துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாட்டில் எங்கு பார்த்தாலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. முந்தைய காலங்களிலும் இதுபோன்ற குற்றங்கள் இருந்தன. ஆனால், அவை மிகக்குறைவாக அங்கொன்றும், இங்கொன்றுமாகவே நடந்தன. தற்போது பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு இணையதளங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

இணையத்தில் ஆயிரக்கணக்கான ஆபாச வலைதளங்கள் உலா வருகின்றன. அவற்றை வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆபாச வலைதளங்களில் மூழ்கியிருக்கிறார்கள். அதில் ஏராளமான வக்கிரங்கள் காண்பிக்கப்படுகின்றன. குறிப்பாக, மேற்கத்திய சீரழிவு கலாச்சாரம் அவற்றில் நிரம்பியிருக்கிறது. இதனால் அவற்றை பார்ப்போரின் மனதும் கெடுகிறது. எனவே, இதுபோன்ற ஆபாச வலைதளங்களை இந்தியாவில் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜேந்திர சிங் கூறினார்.