இந்தியா

அமலானது 144 தடை உத்தரவு : உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் போலீஸ்..! குவியும் பாராட்டு

webteam

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகியுள்ள நிலையில் ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவிய பெங்களூரு போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,21,413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இதற்கிடையே நேற்று நள்ளிரவு தமிழகத்தில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

ஊரடங்கு உத்தரவு நிலவுவதால் மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நிவாரண நிதிகளை அறிவித்து வருகின்றன. மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க ஒரு மீட்டர் இடைவெளியில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியும் வருகின்றனர்.

பல்வேறு பேரிடர் காலங்களில் போலீசார் இறங்கி வந்து மக்களுக்கு உதவுவதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தற்போது பெங்களூருவில் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு அப்பகுதி போலீசார் உணவு வழங்கி உதவி செய்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இதேபோல் காய்கறி கடைகளில் ஒரு மீட்டர் தூரம் கணக்கிடப்பட்டு மக்கள் பொருட்கள் வாங்க வசதியாக அளவுகோலையும் போலீசார் நிர்ணயித்து வருகின்றனர்.