இந்தியா

வரலாற்று அநீதிகளை எடுத்துரைத்துள்ளார் அமித்ஷா - பிரதமர் மோடி பாராட்டு 

webteam

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமித்ஷா, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பிறகு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஜம்மு - காஷ்மீர் என்றுமே தீவிரவாதிகளின் மாநிலமாக இருக்க வேண்டுமா? எங்களுக்கு 5 வருடங்கள் கொடுங்கள். ஜம்மு காஷ்மீரை வளர்ந்த மாநிலமாக மாற்றுகிறோம். அதற்கு ஒரே தீர்வு சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது தான். பாகிஸ்தான் குழுவினர் இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை பரப்ப முயல்கின்றனர். 

குஜராத், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் ஏன் இளைஞர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் அங்கெல்லாம் சட்டப்பிரிவு 370 இல்லை என்பதே. சட்டப்பிரிவு 370ஐ இன்று நீக்கவில்லை என்றால் தீவிரவாதத்தை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாமல் போகும். எங்களுக்கு மத அரசியலில் நம்பிக்கை இல்லை. காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மட்டுமா வசிக்கிறார்கள்? இந்து, சீக்கியர்கள், புத்த மதத்தினர் என பலரும் வசிக்கிறார்கள். சட்டப்பிரிவு 370 நல்லது என்றால் அது எல்லாருக்குமானது. கெட்டது என்றாலும் அது அனைவருக்குமானது என தெரிவித்தார். 

இந்நிலையில், ட்விட்டரில் அமித்ஷாவின் உரையை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விரிவான மற்றும் நுண்ணறிவு கொண்ட விளக்கத்தை அமித்ஷா மாநிலங்களவையில் எடுத்துரைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கடந்த கால அரசுகள் இழைத்த வரலாற்று அநீதிகளை தெளிவாக புரியும்படியும், தற்போதைய அரசின் தொலைநோக்கு பார்வையை முன்வைத்தும் அமித்ஷா பேசியிருப்பது பாராட்டுக்குரியது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.