இந்தியா

இந்திய பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி புதிய பாதையைத் தொடங்கியுள்ளது: பிரதமர் மோடி

webteam

ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தில் புதிய பாதையைத் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடந்த இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் நிறுவன நாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் உடல்நலத்தை மருத்துவர்கள் காப்பது போல, நாட்டின் பொருளாதாரத்தை பட்டயக் கணக்காளர்கள் காக்க வேண்டும் என்று பேசினார். ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்துவதில் பட்டயக் கணக்காளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, நமது சமுதாயத்தின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருப்பதில் பட்டயக் கணக்காளர்களின் பொறுப்பு முக்கியமானது என்றும் பேசினார். கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் குறித்த தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் பகிர்ந்துகொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளதாகக் கூறிய அவர், இதனால் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகளால், சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு வரலாறு காணாத அளவு குறைந்திருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், கறுப்புப் பணம் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியை அரசு கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி தொடங்கியதாகக் கூறிய அவர், இதன்மூலம் பதிவுசெய்யப்பட்ட 3 லட்சம் நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசு கண்காணித்து வருவதாகவும் கூறினார்.  ஜிஎஸ்டி அறிமுகம் இந்திய பொருளாதாரத்தில் புதிய பாதையைத் தொடங்கியுள்ளதாகவும், மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதே உரிமை யூனியன் பிரதேசங்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பேசினார்.