பிரதமர்  முகநூல்
இந்தியா

வயநாடு துயரம்| நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பின் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி!

PT WEB

செய்தியாளர்: மகேஷ்வரன்

வயநாடு துயரத்தில், கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். நிதியின்றி எந்த பணியும் நிற்காமல் இருக்க மத்திய அரசு உதவி செய்யும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

கடந்த ஜூலை 30 ஆம்தேதி வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய, பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி வயநாடு மாவட்டம் நோக்கி புறப்பட்டார். அவருடன் ஹெலிகாப்டரில் கேரள முதல்வர் பினராய் விஜயனும் பயணித்தார்.

வயநாடு மாவட்டத்திற்கு வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் அமர்ந்தவாறு, பேரிடரால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை, பூஞ்சேரிமட்டம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பேரிடர் ஏற்பட்ட தினத்திலும், அதன் பிறகு நடந்த பாதிப்புகள், மீட்புப்பணிகளின் புகைப்படங்களை அவர் ஆய்வு செய்தார்.

கல்பட்டா தனியார் பள்ளி மைதானத்தில் வந்திறங்கிய பிரதமர், அங்கிருந்து சாலை வழியாக சூரல்மலை பகுதிக்கு சென்றார். அங்குள்ள வெள்ளாரமலை அரசு பள்ளி சாலையில் நடந்து சென்ற பிரதமர் மோடி, பேரிடர் ஏற்பட்டு உருக்குலைந்து காணப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். கேரள மாநில ஏடிஜிபி அஜித் குமார் பேரிடர் எவ்வாறு ஏற்பட்டது, மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர், மீட்புப் பணிகள் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விளக்கினார். ராணுவ வீரர்கள் 36 மணி நேரத்தில் கட்டி முடித்த பெய்லி பாலத்தில் நடந்து சென்று பேரிடர் பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை சந்தித்து பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். சூரல்மலையில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, மேப்பாடி பகுதியில் உள்ள SAINT JOSEPH பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு வந்தார்.

அங்கு தங்கியிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி கல்பெட்டா பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, மாவட்ட ஆட்சியர் மேக்னா ஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரிடர் ஏற்பட்ட பகுதியில் 1200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்காக 2000 கோடி ரூபாயை நிதியாகவும் கேரளா அரசு கேட்டிருக்கிறது. அதேபோல வயநாடு பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர், ”பேரிடர் ஏற்பட்ட தினத்தில் இருந்தே கேரள முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசிவருகிறேன். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, மருத்துவர்கள் உள்ளிட்டோரை அனுப்பி வைத்ததாக தெரிவித்த பிரதமர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்து விடப்படவில்லை. கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும், நிதியில்லாமல் எந்த வேலையும் நின்றுவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.