இந்தியா

“ஆயுஷ்மான் திட்டம் கராச்சியிலும் செல்லும்” - சர்ச்சையான மோடி பேச்சு

webteam

கராச்சியில் இருந்தாலும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெறலாம் என பிரதமர் மோடி கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். ஜாம்நகரிலுள்ள குருகோவிந்த் மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அதில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது “ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை இருந்தால், நீங்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும். கொல்கத்தாவில் இருந்தாலும் சரி, கராச்சியில் இருந்தாலும் சரி நீங்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும்” என்று தெரிவித்தார்.

இதைகேட்ட உடனே மக்கள் அனைவரும் சில வினாடிகள் குழம்பினர். பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரில் எப்படி இந்தியாவின் சுகாதார அட்டை செல்லும் என்று மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, தாம் கராச்சியை குறிப்பிடவில்லை என்றும் கேரள மாநிலம் கொச்சியை குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் சமீபகாலமாக எந்த நேரத்திலும் அண்டை நாடு குறித்து கவனம் செலுத்தி வருவதால் கொச்சிக்குப் பதில் கராச்சி என்று கூறிவிட்டதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.