மோடி எக்ஸ் தளம்
இந்தியா

“2014க்குப் பிறகு ஒட்டுண்ணியாக மாறிவிட்டது காங்.” - மக்களவையில் காட்டமாக விமர்சித்த பிரதமர் மோடி!

PT WEB

மக்களவையில் பிரதமர் மோடியின் உரை

மக்களவையில் பிரதமர் நரேந்திரமோடியின் பதிலுரையின்போது, காங்கிரஸ் கட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 2014க்கு முன்புவரை நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்திருந்ததாகவும், 2014க்குப்பிறகு பயங்கரவாதிகளை அவர்கள் நாட்டிற்கே சென்று தாக்கியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Loksabha

கடந்த பத்தாண்டுகளில் பாஜக அரசு பல்வேறு வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இந்திய அரசியல் சாசனம் பற்றி பாடம் எடுப்பவர்களால், ஜம்மு காஷ்மீரில் அதனை செயல்படுத்த முடியவில்லை என்று கூறிய பிரதமர், 370 ஆவது பிரிவின் மூலம் அம்பேத்கரை காங்கிரஸ் அவமானப்படுத்தியதாக விமர்சித்தார். காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ஊழலை மறைக்க மற்றொரு ஊழல் நடைபெற்றதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்

மேலும் பேசிய அவர், “அற்பமான அரசியல் மூலம் நாட்டை வழிநடத்தமுடியாது. சிக்கிம், ஆந்திரபிரதேச மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. கேரளாவில் தனது கணக்கை பாரதிய ஜனதா தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளது. தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்ட்ரா, ஜார்கண்ட், ஹரியானாவில் பாஜகவே வெற்றிபெறும்.

99 இடங்கள் பெற்ற காங்கிரஸ் 100க்கு அல்ல, 543க்கு 99 இடங்கள்தான் பெற்றிருக்கிறது. மக்கள் சிறப்பான தீர்ப்பை அளித்து மூன்றாம் முறையாக தங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். காங்கிரஸ் 2014 க்குப்பிறகு ஒட்டுண்ணியாக மாறிவிட்டது. தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்தவை கூட்டணிக்கட்சிகளின் வாக்குகளே. பாஜக, காங்கிரஸ் நேருக்கு நேர் போட்டியிட்ட இடங்களில் காங்கிரசின் வெற்றி விழுக்காடு 26% தான்.

PMModi

நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. நாட்டில் கலவரங்களை தூண்டிவிட காங்கிரஸ் முயற்சிக்கிறது. பச்சிளம் குழந்தை போல ஒருவர் (ராகுல் காந்தி) மக்களவையில் அழுததைப்பார்த்தோம். ஓபிசிக்களை அவமதித்த வழக்கில் ராகுல்காந்தி பிணையில் உள்ளார். சாவர்க்கரை அவமதித்ததற்காக ராகுல் மீது வழக்கு உள்ளது.

ஜனநாயகம் தழைத்தேங்க காரணமே இந்து மதம் தான். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இந்து மதத்தையும், சனாதனத்தையும் அவமதிக்கின்றனர். அக்னிவீர், குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை குறித்து பொய்யாக கூறி நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு பதில் சொல்லவேண்டும். மக்களவையில் ராகுல்காந்தி பேசியதற்கு 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.

நீட் வினாத்தாளை கசிய விட்டவர்கள் தப்பமுடியாது

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சி நிலை அமல்படுத்தப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, நேரு அமைச்சரவையில் அம்பேத்கர் விலகியதை சுட்டிக்காட்டினார்.

“பிரதமர் எமர்ஜென்சியின்போது ஊடகங்கள் முடக்கபட்டு அரசியல் சாசனம் ஒடுக்கப்பட்டது. கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை ராகுல்காந்தி புண்படுத்திவிட்டார். இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று பேசுவதுதான் காங்கிரசின் கலாசாரமா?” என கேள்வி எழுப்பினார்.

PMModi

மேலும், ராகுல்காந்தி தனது உரையில் முன்வைத்த நீட் நுழைவுத்தேர்வு முறைகேடுகள் குறித்து தனது பதிலுரையில் விளக்கம் அளித்தார்.

நீட் தேர்வு வினாத்தாளை கசியவிட்டவர்கள் தப்ப முடியாது என்றும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். பிரதமர் மோடி பேசிய அனைத்து பேச்சுகளையும் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி உற்று கவனித்துக்கொண்டிருந்தார்.