இந்தியா

பாக். வான்வெளியில் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு 

webteam

பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அந்நாடு அனுமதி மறுத்துள்ளது. 

பிரதமர் மோடி இந்த வார இறுதியில் ஐநா சபையின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்காக இவரது சிறப்பு விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்க அந்நாட்டிடம் அனுமதி கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. இந்திய தூதரகத்திடம் எங்களது முடிவை அறிவித்துள்ளோம். இதற்கு காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இருநாடுகளிடையே நிலவி வரும் பதற்றமான சூழலே காரணம்” எனத் தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே கடந்த வாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அந்த நாடு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.