இந்தியா

நெடுஞ்சாலை பணிக்கு வெட்டியதைவிட 5மடங்கு அதிகமான மரங்களை நடவேண்டும்: கர்நாடக உயர்நீதிமன்றம்

Veeramani

மாநில நெடுஞ்சாலை திட்டத்திற்காக பெங்களூருவின் பன்னேர்கட்டா தேசிய பூங்கா (பிஎன்பி) பாதுகாப்பு மண்டலத்திற்குள் வெட்டப்பட்ட மரங்களை விட ஐந்து மடங்கு மரங்களை நடவு செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் மாநில அரசிடம் கூறியது.

ஜூன் 7-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம், மாநில அரசு மற்றும் கர்நாடக சாலை மேம்பாட்டுக் கழக லிமிடெட் ஆகியவற்றிடம், பன்னேர்கட்டா தேசிய பூங்காவின் இடையக பாதுகாப்பு மண்டலத்திற்குள் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாக மரங்களை நட வேண்டும் என்று கூறியது. இது தொடர்பான பொது நல வழக்கை  விசாரித்தபோது இந்த அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டது.

இந்த நெடுஞ்சாலை திட்டத்தில் 150 கி.மீ நீளத்தில் தாங்கள் கணக்கெடுத்த 8561 மரங்களை உயர்நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் பொதுநல வழக்கில் குறிப்பிட்டனர். கட்டாய சட்ட, சுற்றுச்சூழல், வன மற்றும் வனவிலங்கு அனுமதி இல்லாமல் இந்த சாலைப்பணிகள் தொடங்கியது என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டனர். அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியான பிஎன்பி இடையக மண்டலத்திற்குள் மரம் வெட்டுவது தொடர்பான விசாரணை அறிக்கையை மாநில அரசு சமர்ப்பிக்கத் தவறியதை அடுத்து நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்தது.

இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம், மாநில அரசுக்கு இன்னும் இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளது. "ஜூன் 22 ஆம் தேதி, மாநில அரசாங்கத்தின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக காடு வளர்ப்புக்கான பொறுப்பு பிரிக்கப்படும்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.