இந்தியா

அமர்த்தியா சென் ஆவணப்பட சிக்கல்: தணிக்கை வாரியத்திற்கு கேரள முதலமைச்சர் கண்டனம்

webteam

அமர்த்தியா சென் குறித்த ஆவணப்படத்தில் இந்துத்வா, குஜராத் உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளிக்காததற்கு கேரள முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரும், தத்துவ அறிஞருமான அமர்த்தியா சென் குறித்த ”தி ஆர்கியுமண்டேடிவ் இந்தியன்” என்ற ஆவணப்படத்தை சுமன் கோஷ் என்பவர் இயக்கியுள்ளார். அந்தப் படம் அமர்த்தியா சென், அவருடைய மாணவர் மற்றும் பொருளாதார பேராசிரியர் கெளசிக் பாசு ஆகியோரின் கலந்துரையாடலை மையமாக கொண்டது. அவர்களின் கலந்துறையாடலில், ”குஜராத், பசு, இந்துத்துவ பார்வையில் இந்தியா” போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன, இதுபோன்ற வார்த்தைகளை நீக்கினால்தான் படத்தில் யு/எ சான்று கொடுக்க முடியும் என்று மத்திய திரைப்பட தணிக்கை ஆணையம் கூறியது. இதனால் கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியாக வேண்டிய படம் தாமதமாகியுள்ளது.

இது தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை இந்துத்வாவை பரப்பும் மையமாக மத்திய அரசு மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். கருத்து சுதந்திரத்திற்கே அச்சுறுத்தல் எனவும் பினராயி கூறியுள்ளார்.