இந்தியா

பாசமாக வளர்த்த பெண் மரணம்: சோகத்தில் மாடியிலிருந்து குதித்து உயிரைவிட்ட நாய்..!

jagadeesh

வளர்த்தவர் திடீரென இறந்ததால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாத நாய் தன்னுடைய உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் டாக்டர் அனிதா ராஜ் சிங் என்பவர் அம்மாநில சுகாதாரத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் யாரும் கவனிக்காமல் இருந்த நாயை வீட்டுக்கு அழைத்து வந்து இத்தனை ஆண்டுக் காலம் பாசமாக வளர்த்து வந்துள்ளார். நாய் குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டி, அதற்கு இருந்த நோயையும் குணப்படுத்தியுள்ளார்.இதனால் வளர்ப்பு நாயான ஜெயா, டாக்டர் அனிதா ராஜா சிங் மீது மிகவும் பாசமுடன் பழகி வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை திடீர் உடல்நலக் குறைவால் அனிதா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதனையடுத்து அவருடைய உடல் புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தது.

தன்னை வளர்த்தவர் உயிரற்ற நிலையில் இருப்பதை கண்ட அந்த நன்றியுள்ள வாயில்லா ஜீவன் செய்வதறியாமல் தவித்துள்ளது. வீட்டின் மாடிக்குச் சென்ற ஜெயா அங்கிருந்து கீழே குதித்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டது.

இது குறித்து டாக்டர் அனிதா ராஜ் சிங்கின் மகன் தேஜாஸ் "என்னுடைய அம்மா ஜெயாவை குடும்பத்தின் ஓர் உறுப்பினர் போல பார்த்துக்கொண்டார். அம்மாவின் உடல் வீட்டுக்கு வந்ததும், மாடிக்கு சென்ற ஜெயா கீழே குதித்தது. இதனால், காயங்களுடன் இருந்த ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவள் உயிரிழந்துவிட்டால்" என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி அக்கம்பக்கத்தினர் இடையே வேகமாக பரவியது. வளர்த்தவருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட ஜெயாவை, அனிதா ராஜ் சிங் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே உறவினர்கள் புதைத்துள்ளனர்.