இந்தியா

வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மோடி புகழாரம்

webteam

சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டிற்கு ஆற்றிய சேவை மறக்கப்படவேண்டும் என சிலர் முயற்சி செய்ததாகவும் எனினும் நாட்டின் இளைஞர்கள் அவரை தொடர்ந்து மதித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் நடைபெற்ற தேச ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்பாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் தேச ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பும், அதற்கு பின்பும் வல்லபாய் பட்டேல் நாட்டிற்கு ஆற்றிய சேவை குறித்து பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமைதான் என குறிப்பிட்டார். பின்னர் அவர் தேச ஒற்றுமைக்கான உறுதிமொழியை வாசித்து, ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தீபா கர்மாகர், சர்தார் சிங், சுரேஷ் ரெய்னா, கர்ணம் மல்லேஸ்வரி உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.